search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் உணவகம்"

    கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. 365 நாட்களும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் வகையில் கலைஞர் உணவகத்தை திறந்து உள்ளார்.
    திருவள்ளூர்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் 365 நாட்களும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் வகையில் கலைஞர் உணவகத்தை திறந்து உள்ளார்.

    இதில் பங்கேற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவுகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி மற்றும் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் திராவிடபக்தன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேஷன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளன என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை மந்திரி பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார்.

    கூட்டத்தில், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூக பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    இந்த அரசு பதவியேற்ற உடன் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரூ.978 கோடி செலவிலும், தலா ரூ.4 ஆயிரம் ரொக்கத்தையும் கொரோனா பேரிடர் நிவாரணமாக வழங்கியது. வருகின்ற தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு, 21 உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1161 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக நடத்தி வருகிறது. தரமான உணவை மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் இதன் மூலம் வழங்கி வருகிறது.

    இந்த எண்ணிக்கை மாவட்டத் தலைநகரங்களிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு தலைமை ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு உதவும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வெளிநோயாளிகளின் நலன் கருதி நடத்தப்படும் உணவகங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் பல்வகை சாதங்கள் (சாம்பார், கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாதம்) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் பகலிலும், 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன. 1-6-2021 முதல் 18-11-2021 வரை 15 கோடிக்கும் மேலானோர் இந்த உணவகங்கள் வழியாக பயன்பட்டுள்ளனர். 30,490 கட்டுமானத் தொழிலாளர்கள் (வெளி மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் சேர்த்து) இதே காலகட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

    கொரோனா காலத்திலும் இதர பேரிடர் காலங்களிலும் இந்த உணவகங்களில் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் இதேபோன்று கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளன.

    இந்த திட்டத்திற்காக செப்டம்பர் மாதம் வரை 2021-22-ம் நிதியாண்டில் 3,227 டன் அரிசியும் 362 டன் கோதுமையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு உணவகம் நடத்த சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.3.5 லட்சம் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தை வெற்றிகரமாகவும் தொடர்ந்து நடத்திடவும் தேவையான அனைவருக்கும் விரிவுபடுத்திடவும் மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் 100 சதவீதம் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

    21-9-2021 அன்று மத்திய மந்திரியை நேரில் சந்தித்தபோது கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்திட வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டமைக்காக தமிழ்நாடு விவசாயிகளின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் அரைக்கப்படும் பச்சரிசியில் 1 லட்சம் டன்னை அருகில் உள்ள மாநிலங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் மூலம் ஒப்படைப்பு செய்து அதற்கு ஈடாக 1 லட்சம் டன் புழுங்கல் அரிசியை வழங்கவேண்டும் என்று அன்று நான் விடுத்த மற்றொரு கோரிக்கையையும் விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    முக ஸ்டாலின்

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி மத்திய அரசுடனும், பிற மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டு இந்தியாவை பட்டினி மற்றும் சத்துக்குறைவில்லா நாடாக மாற்ற தமிழ்நாடு துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை கமிஷனர் வி.ராஜாராமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



    ×